நீரிழிவு நோய் என்பது இப்போது பரவலாக காணப்படும் நோய்களுள் ஒன்றாகி விட்டது. இதை குணப்படுத்துவது என்பது சிரமமே. ஆனால் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடுக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலைதான் இருக்கும். ஆனால் சில வீட்டு வைத்தியக் குறிப்புகளைக் கொண்டு எளிதில் கட்டுப்படுத்தலாம்.
நாவல்பழக்கொட்டை
நாவல் பழங்களின் கொட்டைகளைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கொட்டைகளை நன்றாக காயவைத்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியைத் தினமும் அரை ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
மாமரத்தின் இலைகள்
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றை நிழலில் காயவைத்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதன் பின்னர் இந்த நீரை வடிகட்டி அருந்த வேண்டும். தினமும் காலையில் இவ்வாறு செய்து வந்தால் நீரிழிவு நோய் குறைந்துவிடும். இது ஒரு அற்புதமான மூலிகையாகும்.
கருஞ்சீரகம்
கருஞ்சீரகம் மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாகும். மரணத்தைத் தவிர மற்ற அத்தனை விதமான நோய்களுக்கும், இந்த கருஞ்சீரகம் சிறந்த மருந்து என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் கருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக அரைத்து தினமும் உட்கொள்வதன், மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சமையலுக்கு மட்டுமல்லாது சர்க்கரைக்கும் மருந்தாகிறது. இலவங்கப்பட்டையைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அரை ஸ்பூன் என்ற அளவில் இந்தப் பொடியை உட்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இதை சாப்பிட்டு வரும் பொழுது இரத்தத்தின் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் கெட்டக் கொழுப்பைக் கரைப்பதிலும் இது பெயர் பெற்றது.
கற்றாழை
கற்றாழை நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. கற்றாழையின் வெளிப்புறத் தோலை நீக்கி, உள்ளிருக்கும் வழவழப்பான பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து சாறெடுத்து, இந்த சாற்றைத் தினமும் அருந்தி வர, இரண்டாம் வகை சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
வெந்தயப்பொடி
வெந்தயம் கசப்புத்தன்மை நிறைந்தது. இந்தக் கசப்புத்தன்மை சர்க்கரைக்கு அருமருந்து. வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு ஸ்பூன் என்ற அளவில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
வெந்தயக்கீரை
வெந்தயப் பொடி சாபிடுவதுடன் வெந்தயக் கீரையை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரைக்கு நல்ல பலன் கிடைக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரான அளவில் இருக்கும். மேலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரையும். வாரம் இரண்டு முறையாவது வெந்தயகீரை சமைத்து சாப்பிடலாம்.